ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை அடுத்து பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான உயர்மட்ட மாநாடு இன்று சனிக்கிழமை (09.01.2021) ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற மாநாட்டில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், உன்னிச்சை இராணுவ முகாம் மேஜர் அனுஷ்கா விஜயதாச, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஓட்டமாவடி மற்றும் மீறாவோடை பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களின் நலனையும் கருத்திற் கொண்டு ஓட்டமாவடி பஸாரை அல்லது பிரதேசத்தை தனிமை படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதில்லை என்றும் வர்த்தகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் பதினான்கு நாட்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தை மூடுவது என்றும், முககவசம் அணியாமல் திரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது, வர்த்தக நிலையங்களுக்கு சிறு பிள்ளைகளை அழைத்து வருவதற்கு தடை விதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதே வேலை ஓட்டமாவடி பகுதியில் மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு சீனிப்போடியார் வீதி மட்டும் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அவ் வீதி மாத்திரம் மூடப்பட்டுள்ளதுடன்; ஏற்கனவே மூடப்பட்ட அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 32 பேர் கொரோனா தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment