கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் முடக்கப்பட்டுள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் தாராளமாக முன் வந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுமாறு தனவந்தர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற பிரதேச கொவிட் - 19 கண்காணிப்பு குழு கூட்டத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனியினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இங்கு பிரதேச செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
இவ்வாறு கிடைக்கின்ற நிவாரண உதவிகளை சேகரிப்பதற்கும் பகிர்ந்தளிப்பதற்கும் கிண்ணியா உலமா சபையினருக்கு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு குழுவின் வழிகாட்டலின் கீழ் அவர்கள் செயற்படுவார்கள்.
அரசாங்கத்தினுடைய உதவிக்காக அனைத்து தரவுகளும் மாவட்ட செயலாளருக்கு எங்களால் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த முடக்கப்பட்ட பகுதியில் 819 குடும்பங்களைச் சேர்ந்த 2,900 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கான 5000 ரூபா உதவி தொகையை கோரியுள்ளோம். அது விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை முடக்கப்பட்ட பகுதியில் மக்கள் பொறுப்புடனும், எமது பண்பாட்டு விழுமியங்களுடனும் நடந்து கொள்ள வேண்டியது எமது சமூகக் கடமையாகும்.
மக்களுக்கான உரிய நிவாரணங்கள் உரிய நேரத்தில் வந்தடையும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அரசாங்க நிதி நிவாரணம் எல்லாம் ஒரு பொறிமுறையின் கீழே வரவேண்டும். இதனால் காலதாமதம் ஏற்படும்.
இதன் காரணமாக அத்தியவசிய பொருட்களைப் அந்த மக்கள் பெற்றுக் கொள்வதற்காக நாங்களே உதவி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
முடக்கப்பட்ட பகுதி தொடர்ந்து அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். அதனுடைய முழு நன்மைகளைையும் இந்த பிரதேச மக்களே அனுபவிக்கப் போகிறார்கள். இதனால் அங்குள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு பூரண ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment