கல்முனை மாநகர சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கே.செல்வராசாவை, இன்றைய சபை அமர்விலிருந்து வெளியேற்ற உத்தரவிட்ட மாநகர முதல்வர், அடுத்த சபை அமர்வில் கலந்து கொள்வதற்கும் அவருக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (27) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான நிலையியல் குழுக்களுக்குரிய அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கங்களின்போது சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கே.செல்வராசாவை சபையில் இருந்து வெளியேறுமாறு மேயர் பணித்ததுடன் அடுத்த மாத சபை அமர்விலும் அவர் பங்கேற்க முடியாது என்று உத்தரவிடுவதாக அறிவித்தார்.
எனினும் சபையில் இருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்த குறித்த உறுப்பினரை உடனடியாக வெளியேற்றுமாறு படைக்கலச் சேவிதருக்கு மேயர் உத்தரவிட்டார். இதையடுத்து எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் படைக்கல சேவிதரால் அந்த உறுப்பினர் வெளியேற்றபடுவதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொலிஸார் சபைக்குள் பிரவேசித்து, குறித்த உறுப்பினரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. இதையடுத்து மேயர், சபை அமர்வை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்து, சபையை ஒத்திவைத்தார்.
0 comments :
Post a Comment