எஸ்.எம்.எம்.முர்ஷித்-
பிரதேச கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை கட்டார் - கல்குடா நலன்புரி ஒன்றியம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் தொடரில் இரண்டாம் கட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு பிறைந்துரைச்சேனை மெகா விளையாட்டுக்கழக அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணி இடம்பெற்றது.
இத்திட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள 22 ஆரம்பப்பிரிவு பாடசாலைகளும், கல்குடா கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள மூன்று தமிழ்ப் பாடசாலைகளும் உள்ளடங்களாக 25 பாடசாலைகளிலுள்ள 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஷாப், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் ஏ.சி.எம்.அய்யூப்கான், கல்குடா நலன்புரி ஒன்றியத்தின் ஆலோசகர்களான எம்.எம்.நவாஸ் ஆசிரியர், ஏ.யூ.எம்.நளீம் ஆசிரியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அதிபர் ஏ.சி.எம்.அய்யூப்கானிடம் கையளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று நிலையினைக் கருத்திற் கொண்டு, சகல மாணவர்களையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்க முடியாத சாத்தியப்பாடுகள் இன்மையினால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் உரிய பாடசாலைகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment