அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புனித ரமழான் மாதத்தின் இறுதி நாட்களை இலக்கு வைத்தும் பெருநாள் தினத்தன்றும் அதனைத் தொடர்ந்தும் காஸா பிராந்தியம் மற்றும் அல் அக்ஸா வளாகம் என்பன மீது இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல்களை கண்டிக்க முன்வருமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இஸ்ரேலின் விமான குண்டு வீச்சினால் இதுவரை காஸாவில் 50 சிறுவர்கள் உள்ளடங்கலாக 180 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது காஸா மீது தரை வழியாகவும் தாக்குதல்களை நடாத்த இஸ்ரேல் முயற்சிப்பதானது அப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
கிழக்கு ஜெரூசலமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளை கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து புனித அல் அக்ஸா பள்ளிவாசலில் ரமழான் மாத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட பலஸ்தீனர்களை பழிவாங்கவே இஸ்ரேல் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத் தாக்குதல்களை கண்டிக்கவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை தட்டிக் கேட்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும்.
இதேவேளை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை அகற்றுவதற்கு சமூக ஊடக நிறுவனங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் கண்டனத்துக்குரியவை. இது மனித உரிமைகளுக்கு ஆதரவான குரல்களை நசுக்கும் முயற்சியாகும்.
அதேபோன்று களத்தில் நின்று அறிக்கையிடும் பல பலஸ்தான ஊடகவியலாளர்களும் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். காஸாவில் அமைந்துள்ள அல்ஜஸீரா அசோசியேட் பிரஸ் பீரோ போன்ற பிரதான சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்கள் அமைந்துள்ள கட்டிடம் இஸ்ரேலிய வான் படையினரால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அத்துமீறலாகும்.
இவ்வாறு இஸ்ரேலின் மனித குலத்துக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. அந்த வகையில் மேற்படி தாக்குதல்களை நாம் கண்டிப்பதுடன் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடாவடித்தனங்களை முடிவுக்குக் கொண்டுவர விரைந்து செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச பொறிமுறைகளை கோருகிறோம். அத்துடன் பலஸ்தீன மண்ணில் அமைதி திரும்பவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும் இந்த நன்னாட்களில் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
16.05.2021
0 comments :
Post a Comment