கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விமானங்களில் இலங்கை வரும் அதிக பட்ச பயணிகள் தொடர்பான கட்டுப்பாட்டை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு, சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
கொவிட் பரவல் ஆரம்பத்தில், கட்டுநாயக்க வரும் விமானங்களில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமானங்களில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம், கடந்த 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கும், ஏனைய பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத பயணிகளை, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment