மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள மிகப் பழைமை வாய்ந்த வித்தியாலயமான கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம், அதன் நூற்றாண்டைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
1923 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வித்தியாலயத்தில், தற்போது 1,200 மாணவர்களுக்கும் கூடுதலானோர் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போதுள்ள கட்டிடங்கள், மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்த போதுமானதாகக் காணப்படாமையினால், இவ்வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாக, இவ்வித்தியாலயத்தின் ஆரம்ப கால தலைமை ஆசிரியர்களில் ஒருவரான மர்ஹூம் எம்.ஐ. முஹம்மது அவர்களின் ஞாபகார்த்தமாக, அவரது புதல்வர் எம்.எம். லியாவுல் பெளஸ் மூலமாக பெருந்தொகைப் பணச் செலவில், மூன்று மாடிக் கட்டிடமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளில் 50 வீதம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 2022 மார்ச் மாதம் நடுப்பகுதியில் இப்புதுக் கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்கு, அதிபர் ஆஸிம் தலைமையிலான இவ்வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த மூன்று மாடிக் கட்டிடத்தில், "மர்ஹூம் முஹம்மது ஞாபகார்த்த கேட்போர் கூடம்" கீழ்த் தளத்திலும்,
மர்ஹூம் முஹம்மது அவர்களின் துணைவியாரும், கொடை வள்ளலுமான லியாவுல் பெளஸ் அவர்களின் தாயாரின் பெயரில் "மர்ஹூமா உம்மு ஹபீபா கலாசார நிலையம்" 2 ஆம், 3 ஆம் மாடிகளில் அமையப் பெறுவதும் சிறப்பம்சமாகும்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிற்போடப்பட்ட இவ்வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவையும், புதுக் கட்டிடத் திறப்பு விழாவையும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சம காலத்தில் நடத்தப்படவிருப்பதாக, அதிபர் ஆஸிம் தெரிவித்தார்.
இந்த விழாவின் போது, எழுத்தாளரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான "கலாபூஷணம்" எம்.ஏ.எம். நிலாம் ( ஈழத்து நூன் ) அவர்களினால் எழுதப்படும் "வித்தியாலய வரலாறு, பள்ளிவாசல் வரலாறு மற்றும் ஊர் வரலாறு" அடங்கிய முக்கியமான நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment