இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தினது உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில் 'உயிர் மூலக் கூறு மாற்றியமைக்கப்பட்ட அங்கிகள் மற்றும் உயிர் பாதுகாப்பு' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தொழில்நுட்பவியல் கேட்போர் கூடத்தில் பல்கலைக்கழக உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவின் துறைத்தலைவர் கலாநிதி ஏ.என்.எம்.முபாறக் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சுற்றாடல் அமைச்சு ஆகியவைகளின் அணுசரனையுடன் இரு தினங்களுக்கு இடம்பெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையானது முதலாவது தினமான 25 ஆம் திகதியன்று அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விஞ்ஞானத் துறை மற்றும் விஞ்ஞான துறையற்ற ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தினமான 26 ஆம் திகதியன்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்குமாக தினமும் காலை 08.00 மணி தொடக்கம் பி.ப. 04.00 மணிவரை நடைபெறவுள்ளதாக துறைத் தலைவர் கலாநிதி முபாறக் தெரிவித்தார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சமூகங்களை தொடர்பு படுத்தும் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களின் வேலைத்திட்டத்தின் கீழ் துறைசார்ந்த இவ்வாரான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தொழில்நுட்பவியல் பீடத்தினது உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவினால் வழங்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்கள் பிரதம அதிதியாகவும், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment