ராஜபக்சக்கள் போரை முடித்ததாலேயே இன்று சுதந்திரமாக போராட முடிகின்றது என்பதை மறந்துவிட வேண்டாம்
இரண்டு வருடங்களுக்காவது அனைத்து போராட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து வகையான போராட்டங்களையும் ஈராண்டுகளுக்காவது நிறுத்தி, ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் கோட்டை விகாரைப் பிரிவின் பதிவாளரான பெல்பொல விபஸ்சி தேரர்.
நாட்டில் 30 வருடங்களாக நீடித்த போரை மஹிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று சுதந்திரமாக போராட முடிகின்றது என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை சேதவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அவ்வேளையில் அனுசாசன உரையாற்றிய பெல்பொல விபஸ்சி தேரர் தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசகர்கள் எவரும் தேவையில்லை, எல்லாம் அறிந்த சிறந்த விமானியே அவர் எனவும் சுட்டிக்காட்டினார்.
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமையும், தூரநோக்கு சிந்தனையுமே அவரின் தலைமைத்துவத்துக்கான ஆபரணமாகும். இந்நாட்டில் ஒழுக்கமும், பொறுமையும் இல்லை. பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்த்துவிட முடியாது. எனவே, இந்நாட்டை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவர் முறையாக செயற்பாடவிட்டால் போராடலாம்.
மஹிந்த ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார், கோட்டாபய ராஜபக்சவும் விரட்டியடிக்கப்பட்டார். இப்படி வருகின்ற எல்லா தலைவர்களையும் விரட்டியடித்தால் நாட்டை ஆள்வது யார்? போராட்டங்கள் மூலமே நாட்டை குழப்ப முயற்சிக்கப்படுகின்றது. எனவே, அனைத்து போராட்டங்களும் இரண்டு வருடங்களுக்காவது நிறுத்தப்பட வேண்டும்." -எனவும் தேரர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment