இலங்கை உள்ளுராட்சி மன்ற சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சகவாழ்வு குழுக்கள் இன்று(23) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவிற்கு விஜயம் செய்தது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு ,பொத்துவில் ,லாகுகல ஆகிய மூவினங்களையும் பிரதிபலிக்கின்ற பிரதேச சபைகளின் சகவாழ்வு குழுக்கள் இதிலே கலந்து கொண்டன.
மூன்று சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ,மற்றும் சகவாழ்வு குழு உறுப்பினர்கள் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டிருந்தார்கள்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை இம் மூன்று பிரதேச சபைகளின் சகவாழ்வு குழுக்கள், காரைதீவில் இருந்து தமது பயணத்தை மேற்கொண்டன.
நாளை (24) புதன்கிழமை நுவரெலியா மாநகர சபை மண்டபத்திலே சந்தித்து அங்கு சகவாழ்வு குழுக்களின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாட இருக்கின்றார்கள்.
இலங்கை உள்ளாட்சி மன்ற சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் பெருமாள் பிரதீப் தலைமையிலே இந்த கலந்துரையாடல் இடம் பெற இருக்கின்றது.
இந்த நுவரெலியா விஜயம் தொடர்பாக, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவிக்கையில்..
இன்று நாட்டுக்கும், உலகத்துக்கும் தேவையானது சகவாழ்வு, ஐக்கியம், நல்லிணக்கம் ,இன உறவு என்பதே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை இழந்து உலகமே தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி மன்ற சம்மேளனம் இப்படிப்பட்டதொரு வேலைத் திட்டத்தை தயாரித்து, சகவாழ்வு குழுக்களை அமைத்து இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவது மகிழ்ச்சி தருகின்ற விடயம் ஆகும்.
நுவரெலியா மாநகர சபையின் சகவாழ்வு செயற்பாடு மற்றும் எமது அம்பாறை மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் அங்கு பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்படவிருக்கின்றன.
இது எதிர்கால இன நல்லுறவு, சகவாழ்வு மற்றும் ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று பெரிதும் நம்புகின்றேன். சம்மேளனத்திற்கு நன்றிகள். என்றார்.
0 comments :
Post a Comment