பல்கலைக்கழக மாணவர்களினதும் பணியாளர்களினதும் நலன் கருதி தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் சுகாதார மையம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உயர் அதிகாரிகள் குழுவினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸிடம் கேட்டுக் கொண்டதற்கினங்க இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டன.
இவ்விஜயத்தில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையிலான உயர் அதிகாரிகளும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.வீ.ஏ.வாஜித் மற்றும் பல் வைத்திய பிரிவு வைத்தியர் எம்.எச்.எம்.சரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உபவேந்தர் கேட்டுக் கொண்டதற்கினங்க விரைவில் பல் வைத்திய பிரிவு உள்ளிட்ட சுகாதார மையம் அமைக்கப்படும் என்றும் அதற்கான அடித்தளத்தினை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் விட்டிருக்கிறார் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.வீ.ஏ.வாஜித் தெரிவித்தார்.
பல்கலைக்கழக சமூகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் பணியாளர் களுக்கும் சுகாதார சேவைகளை வழங்குவதில் ஆரம்பிக்கப்படவுள்ள சுகாதார மையம் முக்கிய பங்கு வகிக்கும் என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுகாதார மையத்தினால் உடல் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் குணப்படுத்தும் சேவைகளை உள்ளடக்கி, கல்வி வாழ்க்கையில் மாணவர்கள் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் உபவேந்தர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment