சாய்ந்தமருதின் முதுசொம் டாக்டர் ஜெமீலின் மறைவு சமூகப் பரப்பில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது; - சாய்ந்தமருது ஷூரா சபை அனுதாபம் -



சாய்ந்தமருது நிருபர்-
டந்த அரை நூற்றாண்டு காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி, கலாசார, சமூக முன்னேற்றப் பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்து வந்த சாய்ந்தமருதின் முதுசொம் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவானது சமூகப் பரப்பில் எவராலும் ஈடுசெய்ய முடியாத பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சாய்ந்தமருது ஷூரா சபை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது ஷூரா சபையின் சார்பில் அதன் உப தலைவர் எம்.ஐ.எம்.ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியரான எம்.ஐ.எம்.ஜெமீல், இப்பிரதேசத்திற்கு மட்டும் சொந்தமான ஒருவராக பார்க்கப்படவில்லை. பொதுவாக கிழக்கு மாகாணத்திற்கும் முழு நாட்டுக்கும் தேவையான ஒரு பொக்கிஷமாகவே அவர் கருதப்படுகிறார். அவரது சமூக, இன நல்லுறவுப் பணிகள் அந்தளவுக்கு பறந்து விரிந்து காணப்பட்டிருந்தன.

இவற்றுக்கப்பால் தான் பிறந்த மண்ணை அவர் மிகவும் நேசித்தார். ஊரின் சமூக, கலாசார, பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதிலும் அவற்றின் முன்னேற்றத்திலும் அவர் அதீத கரிசனை கொண்டிருந்தார். தனது பிரதேச மக்களின் வாழ்வொழுங்கு சீர்செய்யப்பட வேண்டுமென்பதில் பெரும் ஆதங்கம் கொண்டிருந்தார்.

இப்பிரதேசத்தின் கல்வி, கலாசார, பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். பிரதேசத்தின் பௌதீக வள மேம்பாட்டிலும் தேவைகள் மற்றும் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதிலும் அவர் கூடிய கவனம் செலுத்தி வந்தார்.

தனது உழைப்பால் கட்டி வளர்க்கப்பட்ட வைத்தியசாலையை தனது கண்ணோடு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி விட வேண்டுமென்ற வேட்கையுடன் ஷூரா சபை ஊடாகவும் இதர தரப்பினருடனும் இணைந்து அவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான நகர சபையை உரிய அணுகுமுறையுடன் வெற்றிகொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடம் காணப்பட்டது. நகர சபைக் கோஷத்தைக் காரணம் காட்டி ஏனைய அபிவிருத்திகளை புறமொதுக்கி, ஊரை இன்னும் பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

இவ்வாறான பின்னணியுடன் ஊர் சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, ஒரே குடையின் கீழ் முன்கொண்டு செல்ல வேண்டுமென்ற தூரநோக்கு சிந்தனையுடன் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது ஷூரா சபையின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு, இந்த அமைப்பை சிறப்பாக வழிநடாத்தியிருந்தார்.

சிவில் அமைப்புகளும் சமூக சேவைகளும் அவரோடு பின்னிப்பிணைந்த விடயங்களாக இருந்தமையினால் மிக முக்கியமான காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஷூரா சபையை பொறுப்பேற்பதையோ அதன் ஊடாக ஊர் நலன் சார் விடயங்களுக்காக முன்னிற்பதையோ பெரும் சவாலான விடயமாக அவர் கருதவில்லை. இந்த அமைப்பு உத்வேகத்துடன் செயற்பட்ட மிகக் குறுகிய காலத்தினுள் பல விடயங்களை சாதிப்பதற்கு டொக்டர் ஜெமீல் ஆணிவேராக தொழிற்பட்டிருந்தார்.

இன்று கம்பீரமாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற சாய்ந்தமருது வைத்தியசாலை சில வருடங்களுக்கு முன்னர் மந்த கதியில் இயங்கியதைக் காரணம் காட்டி, இது மூடு விழாக்காணவிருப்பதாகத் தெரிவித்து, இன்னொரு வைத்தியசாலையுடன் இதனை இணைத்து, இல்லாமல் செய்வதற்கு சுகாதார அமைச்சு மட்டத்தில் திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோது, ஷூரா சபை உரிய தருணத்தில் தலையிட்டு, அதனை முறியடிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக இயங்கி வெற்றி கண்டதன் பிரதிபலனாகவே இவ்வைத்தியசாலை பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறே கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் முரண்பாடுகள் தோன்றி, கல்லூரியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டு, கல்வி நடவடிக்கைகள் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டபோது, இவ்விடயத்தில் ஷூரா சபை தலையிட்டு, நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுத்திருந்தது. இவ்வாறு இன்னும் பல முக்கிய விடயங்களை எமது ஷூரா சபை முன்னின்று கையாள்வதற்கு டாக்டர் ஜெமீல் அவர்களின் தலைமைத்துவம் எமக்கு பெரும் சக்தியாக அமைந்திருந்தது.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் 2005ஆம் ஆண்டு முற்பகுதியில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சுனாமியினால் உயிர், உடமை, வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதிலும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார்.

அத்துடன் பெரிய பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்தை பூர்த்தி செய்தமையும் இப்பிரதேசத்தின் வரலாறுகளை தொகுத்து, ஆவணப்படுத்தி, நூலாக வெளியிட்டமையும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பைத்துஸ் ஸக்காத் எனும் நிதியத்தை ஸ்தாபித்து, அதனை வெற்றிகரமாக முன்கொண்டு சென்றமையும் அன்னாரது மிகப்பெறுமதியான வரலாற்றுச் சேவைகளாக நோக்கப்படுகிறது.

தனது நீண்ட கால மருத்துவ சேவை, பிரதேச நலன்சார் பணிகள், பிராந்திய முன்னேற்றத்திற்கான பங்களிப்பு என்பவற்றுக்கு மேலாக பல்வேறு சிவில் அமைப்புகள் ஊடாக சமூக ஒற்றுமை, இன நல்லுறவு, சகவாழ்வு, சமாதான செயற்பாடுகளிலும் பிற மதப் பெரியார்களுடன் கைகோர்த்து முக்கிய பங்காற்றியிருந்தமை என்றும் போற்றத்தக்க பணியாக அமைந்திருக்கிறது.

வைத்திய சேவையாயினும் பள்ளிவாசல் நிர்வாகமாயினும் சிவில் சமூக செயற்பாடாயினும் இன, மதம் சார் கலாசார செயற்பாடுகளாயினும் அனைத்து விடயங்களையும் உரிய இலக்குகளை வெற்றி கொள்ளும் வகையில் நேர்மையுடன் திட்டமிட்டு, நேர்த்தியாக நடைமுறைப்படுத்துவதில் டாக்டர் ஜெமீல் ஓர் உதாரணபுருஷராகத் திகழ்ந்தார்.

பிரதேசத்தின் அறிவுசார் தலைமையாக, தகவல் மற்றும் வரலாற்று பொக்கிஷமாக, சிறந்த பண்பாளராக, எதிலும் உண்மை- நேர்மையையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்த ஒரு கனவானாக, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் சிறந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து, வழிகாட்டிய தலைவராக அவர் திகழ்ந்தார்.

கல்விமான்கள், பெரியார்கள், முதியோர்கள் மதிக்கப்பட வேண்டுமென்ற இலட்சியத்துடன் எப்போதுமே முன்மாதிரியாக செயற்பட்டவர்.

அவரது கதை, பேச்சு, உடை, நடை, பாவனை என்று எல்லாமே பிற மனிதர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருந்தது. மனிதன் என்ற ரீதியில் ஒருவர் மற்றவருடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதற்கு மிகவும் முன்மாதிரிமிக்க உயர்ந்த மனிதராக சமூகத்தில் அவர் வலம் வந்தார். அதனால் எல்லோரிடத்திலும் அவருக்கென தனி மதிப்பு, மரியாதை இருந்தது. எதிரியாக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் கதை, பேச்சில் இங்கிதம், நேர்மை, நாகரீகம் தவறி விடக்கூடாது என்பதிலும் வாழ்வொழுங்கு என்பது ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் வேரூன்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தார். இது விடயமாக நிறைய எழுதியும் பேசியும் வந்தார்.

உண்மையில் அன்னாரது இழப்பு என்பது எமது ஷூரா சபைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பொதுவாக அன்னாரது மறைவு எமது பிராந்திய, சமூகப் பரப்பில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் இன நல்லுறவை வேண்டி நிற்கின்ற உலகிற்கும் இழப்பாக அமைந்துள்ளது.

அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்க சாய்ந்தமருது ஷூரா சபை பிரார்த்திக்கிறது- என்று அந்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :