நாட்டில் விரைவில் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அதற்காக அரசியலை முன்வைத்து இனங்களிடையே முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கு சில வங்குரோத்து இனவாதிகள் தூபமிடுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.
இவ்வாறு ஊடக மாநாடடில் பேசிய பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்திபன் தெரிவித்தார் .
பொத்துவில் சின்னவட்டிவயலில்உள்ள காணியை அபகரிக்கும் நோக்கில் எழுந்துள்ள சதி தொடர்பில் விளக்கமளிக்க அவர் ஊடகவியலாளர் மாநாட்டை இன்று(13) ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தினார் .
அதன் போது பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன். ,பிரதேச சபை தவிசாளரான ஜெயசிறில் ( காரைதீவு) , மற்றும் மாணவர் மீட்பு குழுத்தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான செல்வராஜா கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
அச்சமயம் ஆலயங்களின் வண்ணக்கர்மார் , விகாராதிபதிகளும் கலந்துகொண்டார்கள்
அங்கு உதவி தவிசாளர் பார்த்திபன் மேலும் தெரிவிக்கையில்..
பொத்துவிலின் பூர்வீகம் எங்களுக்கு நன்கு தெரியும். இங்கு ஏனைய இனங்கள் கடந்த காலங்களில் அரசநிலங்களையும் தமிழர்களின் பூர்வீக காணிகளையும் எவ்வாறு அபகரித்து தமது வணக்க தலங்களுக்கு எடுத்துக் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன் .அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழர்களின் பூர்வீக காணிகளையும் அரச காணிகளையும் அபகரித்து அபகரித்து வரும்பொழுது எல்லாம் நாங்கள் இன முரண்பாட்டை தூண்டிவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் அமைதியாக இருந்தோம் .
ஆனால், இன்று எமது உறுதிக்காணிகளில் கைவைக்க முன்வந்துள்ளனர். இனியும் நாங்கள் அமைதிகாக்க முடியாது. அதற்காகவே இங்கு குரல் எழுப்புகின்றோம்.
இந்த அபகரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரச அதிகாரிகள் நீதியான முறையில் சட்டரீதியாக நடந்து கொள்ள வேண்டும்.
வரலாற்றை மாற்றியமைக்க இடமளிக்கமுடியாது.
குறித்த காணி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் தொடக்கம் சகல உறுதி ஆவணங்களும் என்னிடம் உள்ளன. எந்த நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தயார்.
மட்டக்களப்பு பொத்துவில் பிரதான வீதியில் உள்ள பொத்துவில் சின்ன வட்டிவயல் 17 ஏக்கர் காணி கடந்த 120 வருட காலமாக தனியாரின் உறுதிப் பூமியாக இருந்து வந்தது .
பொத்துவில் சின்னவட்டிவயலில்உள்ள உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய காணியை அபகரிக்கும் நோக்கில் நாளை திங்கட்கிழமை(14) சில இனவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த வேளையிலே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்.
1920 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தை சேர்ந்த காசிநாதர் வைத்திலிங்கம் மார்கண்டர் பராமரித்து வந்திருந்தார். அதனை மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த வள்ளியம்மை தேவநாயகம் என்பவருக்கு விற்றுக் கையளித்தார்.
அவர் 1938 ஆம் ஆண்டு உகந்தமலை முருகன் ஆலயம் மற்றும் ஐந்து ஆலயங்கள் 02 பன்சலைகள் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் அன்பளிப்பு செய்தார். அதன் பின்னர் அவர்கள் இக் காணியை தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றனர். பலர் வீடுகளை அமைத்து வாழ்கின்றனர்.
2015 இல் எனது வேண்டுகோளில் அன்று இந்து கலாச்சார அமைச்சராக இருந்து டிஎம் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு கதிர்காம பாதயாத்திரை செல்பவர்களுக்கான தங்குமிடம் ஒன்றை அமைக்க அடிக்கல் நட்டோம். அரசியல் மாற்றத்தால் அது தொடரவில்லை.
கடந்த 84 வருட காலமாக நாங்கள் தான் இதனை பராமரித்து வருகின்றோம்.
இது அரச காணியோ அல்லது வேறோருவரின் காணியோ அல்ல என்பதனை ஆணித்தரமாக தெரிவிக்கின்றேன். என்றார்.
0 comments :
Post a Comment