அரசஅதிபர் டக்ளஸ் ஏர் பிடிக்க, மேலதிக அரச அதிபர் ஜெகதீசன் அவுரியில் மேல்நின்று நெல்தூற்ற, அம்பாறை மாவட்ட தைப்பொங்கல் விழா நேற்று முன்தினம் களைகட்டியது.
அம்பாறை மாவட்ட செயலகத்தின் தைப்பொங்கல் விழா, வெகு சிறப்பாக நேற்று முன்தினம் அரசாங்க அதிபர் என்.டக்ளஸ் தலைமையில் கச்சேரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நீண்ட காலத்துக்கு பிறகு மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி ஏற்பாட்டில், மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசனின் வழிகாட்டலில் பாரம்பரியங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
மூவின அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்து கொண்ட இவ் விழாவில் முறைப்படி ஏர் பிடித்து உழுதல் தொடக்கம் அறுவடை வரைக்கும் செய்முறை விளக்கங்களுடன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அதன்போது, அரச அதிபர் என்.டக்ளஸ் ஏர் பிடிக்க, மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் வேலைக்காரன் கம்புடன் வர, ஏனைய உத்தியோகத்தர்கள் சுளகு கைப்பெட்டி போன்ற உபகரணங்களைச் சுமந்து வந்த காட்சி பலரையும் வெகுவாகி ஈர்த்தது.
ஏலவே கொண்டு வரப்பட்ட விளைந்த வேளாண்மையை அரச அதிபர் உள்ளிட்ட அனைவரும் தாக்கத்தி கொண்டு அறுவடை செய்து, அதனை படங்கில் இட்டு அடித்து பதப்படுத்தி அவுரியில் மேல் நின்று கைப்பெட்டியிலும் சுளகிலும் வைத்து தூற்றி சுத்தமான நெல்லாக்கினர்.
பின்பு, அதை உரலில் இட்டு உலக்கையால் குற்றி அரிசாக்கி, பின்பு பொங்கல் பானையை வைத்து எருமைப்பால் இட்டு பொங்கினார்கள்.
பின்பு கரும்பு உள்ளிட்ட மங்களப் பொருட்களின் வைத்த பீடத்தில் வைத்து பொங்கல் செய்து வழிபட்டார்கள்..
மொத்தத்தில் பொங்கல் விழா அனைத்து இனமதத்தினரையும் வெகுவாக கவர்ந்தது.
0 comments :
Post a Comment