அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மீது இரா.சாணக்கியனின் (எம்பி) விமர்சனம் : ஜனநாயக ஐக்கிய முன்னணி வன்மையான கண்டனம்



சுற்றாடல்துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மீது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக தெரிவுத்துள்ளது.

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடாக்கிளை இக்கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் பேசுபொருளாக உருவெடுத்துள்ள ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்ற முயற்சியுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் மீது விமர்சனங்களை வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன் (எம்பி) முதலில் ஒரு விடயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயரை தன்னிச்சையாக மாற்ற எடுத்த நடவடிக்கையால் தற்போது மூக்குடைபட்டுள்ளர்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் நேற்று முன்தினம் (29) மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன் (எம்பி) சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களை நாகரீகமற்ற முறையில் விமர்சித்திருந்தார்.
புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பாக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அச்செயற்பாடு எதிர்வரும் நாட்களில் எதிரொளிக்கும்.

ஏறாவூரில் இடம்பெறாத வீதிப்பெயர் மாற்றம் குறித்து விமர்சிக்கும் இரா.சாணக்கியன் (எம்பி) இன்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடப்படுவதையும் அபகரிக்கப்படுவதையும் வாய் திறந்து பேச முடியுமா?

முஸ்லிம் சமூகம் குறுகிய வட்டத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான காணிகள் பகிர்ளிக்கப்படாமலிருப்பது நீங்கள் அறியாத விடயங்களல்ல.

சிறுபான்மைச் சமூகத்துக்கு குரல் கொடுப்பதாக தம்பட்டம் அடித்து, நடித்துக் கொண்டிருக்கும் தாங்கள் தைரியமிருந்தால் வெறுமனே 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டத்திற்குள் முடக்கப்பட்டு வாழும் மக்களுக்காக கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முறையாகக் கிடைக்க வேண்டிய 240 சதுர கிலோமீட்டர் காணியையும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்ட 176 சதுர கிலோமீட்டர் காணியையும் கிடைக்க குரல் கொடுக்க முடியுமா?

இவ்வாறான காணி மற்றும் பிரதேச எல்லை முரண்பாடுகள் கல்குடாவில் மட்டுமல்லாது, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசகளிலும் காணப்படுகின்றமை நீங்கள் அறியாத விடயங்களோ காத்தான்குடி எல்லைக்குட்பட்ட பூநொச்சிமுனை மண்முனை பிரதேச சபையுடன் இணைக்க எடுக்கும் முயற்சிகள் நீங்கள் அறியாதவையோ அல்ல.

இணைந்த வடகிழக்கு வேண்டுமென்று நீங்கள் போராடுகின்றீர்கள். நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சனைக்கு நீங்களோ அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியோ வழங்கிய தீர்வுகள் தான் என்ன?

முஸ்லிம்களுக்கு உரிமை பெற்றுத்தருவதாகக் கூறும் கூட்டமைப்பும் அதன் பாராளுமன்ற உறுப்பினரான நீங்களும் முஸ்லிம்களை ஏமாற்றவே செய்கின்றீர்கள்.
இவ்வாறான நிலையில், அமைச்சர் மீது காழ்ப்புணர்வுகளை அள்ளி வீசி நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :