இம்முறை வடக்கு கிழக்கில் இருந்து கானகத்தின் ஊடாக பாதயாத்திரையில் முதல் நாள் வரும் முதல் தொகுதி பாதயாத்திரீகர்கள் கதிர்காமம் நுழைவாயிலில் முறைப்படி சம்பிரதாய பூர்வமாக வரவேற்கப்படுவர்.
இவ்வாறு கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தெரிவித்தார்.
மேலும் கடந்த வருடம் பாதயாத்திரையில் சுமார் 30,000 பேரளவில் கதிர்காமத்துக்கு வந்திருந்தனர். இம்முறை அது 60,000ஆக உயரம் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.
சித்தர்கள் குரல் அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை அவரது கதிர்காம வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவரும் இந்தியா வாரணாசி பெலாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
அச்சமயம் அமைப்பின் ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
வருடா வருடம் வடக்கு கிழக்கிலிருந்து இரண்டு மாதங்கள் பயணித்து கானகத்தின் ஊடாக கதிர்காமத்திற்கு வரும் அடியார்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அவர்களை வரவேற்பதும் இல்லை. கவனிப்பதும் இல்லை. இது அவர்கள் மத்தியில் கவலையாக உள்ளது.
எனவே முதல் தொகுதி அடியார்களையாவது முறைப்படி சம்பிரதாயபூர்வமாக கதிர்காமத்தில் வரவேற்க நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கும் மன நிறைவாக இருக்கும். ஒரு அங்கீகாரமுமிருக்கும். புனித பூமி இன ஐக்கிய சமாதான பூமி என்ற சொற்களும் அர்த்தப்படும் என்று கூறினார் .
அதற்கு பதில் அளித்த பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர "நல்ல யோசனை. மகிழ்ச்சி. நிச்சயமாக இம்முறை முதல் நாள் வருகின்ற சித்தர்கள் குரல் அமைப்பினர் மற்றும் முதல் தொகுதி அடியார்களை வரவேற்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
வரலாற்று ரீதியாக இது முதல் தடவையாக இடம் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பில் அகில உலக மகா சித்தர்கள் அறக்கட்டளை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான ஆலோசகரும் வாரணாசி பெலாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சித்தவித்யாகீர்த்தி வேதிக்பண்டிற் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் குருஜி தலைமையில் சித்தர்கள் அமைப்பின் தலைவர் ஆதித்தன் ,உப தலைவர் மனோகரன், நமசிவாய மகேஸ்வரன் சுவாமி, ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரியர் தியாகராஜா, சிங்கப்பூர் டாக்டர் பி.மகேஸ்வரன், வீரமுனை கஸ்தூரன், மற்றும் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
இன மத பேதமின்றி சமாதானமாக பெருமனதுடன் நல்ல சிந்தனையுடன் சேவையாற்றி வரும் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகரவை சித்தர்கள் குரல் அமைப்பினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.
நிலமே அங்கு மேலும் தெரிவிக்கையில்
இம்முறை புத்தாண்டு வருட பிறப்புக்கு கதிர்காமத்துக்கு சுமார் 5000 மூவின அடியார்கள் வருகை தந்தனர். இது சமாதான புண்ணிய பூமி .அனைவரும் ஐக்கியமாக சமாதானமாக வாழ வேண்டும் .இந்த கதிர்காமதலம் அனைத்து மக்களுக்கும் பொதுவான புண்ணிய பூமி. சித்தர்கள் குரல் அமைப்பு கடந்த வருடம் இங்கு யாகத்தையும் அன்னதானத்தையும் வழங்கி இருந்தமை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இம்முறையும் அதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
பாதயாத்திரையில் கலந்து கொள்வோர் வயது கட்டுப்பாட்டுடன் ஆசார பூர்வமாக பங்கேற்பதை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது
என்றார்.
அதற்கு பதில் அளித்த சித்தர்கள் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி நிச்சயமாக இம்முறையும் அன்னதான ஏற்பாடுகளை செய்கிறோம் . இறுதியில் நிலமே டிஷான் குணசேகர சித்தர்கள் குரல் அமைப்பினருக்கு விருந்து உபசாரம் அளித்துக் கௌரவித்தார்.
0 comments :
Post a Comment