சாய்ந்தமருது கமு மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றார், பாடசாலை நலன் விரும்பிகள் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.
இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், பிரதான கோரிக்கையாக திருமதி றிப்கா அன்சார் எனும் பெண் அதிபரை அதிபராய் தொடர்ந்தும் இருக்க வழி விடுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இங்கு கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இப்போராட்டத்திற்கு தீர்வு இடைக்கவில்லை என்றால் முழு பாடசாலை சமூகத்தையும் ஒன்றிணைத்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என சூளுரைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெண்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர் இவ்வாறு தனது கருத்தை முன்வைத்தார்:
ஒரு பாடசாலை சமூகம் எவரை விரும்புகின்றதோ அவர்தான் அந்தப் பாடசாலைக்கு பொருத்தமான அதிபர்.
ஒரு பாடசாலை, ஒரு சமூகம் விரும்பாத ஒருவரை பாடசாலையில் அதிபராக வைக்க முடியாது. எனவே இங்கு தரம் முக்கியமல்ல.
சமூகம் விரும்பும் நபர் தான் முக்கியம் கடந்த காலங்களில் அவர்கள் செய்த சேவை தான் அதற்கு சான்று பகர்கின்றது.
பாடசாலையின் தரத்துக்குரிய அதிபரை நீங்கள் நியமிப்பதானால்
கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளில் உரிய பாடசாலைக்கு உரிய அதிபர்கள் இல்லாத நிலை பல இடங்களில் காணப்படுகின்றது .
உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு குறிப்பிடலாம் .
1. கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் தரம் இல்லாத ஆசிரியர் தரத்தில் உள்ள ஒருவர் அதிபர் இருந்தார்.
2. சம்மாந்துறை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம் இரண்டைச் சேர்ந்த அதிபர் இருந்தார்.
3. காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலையில் தரம் 3 யைச் சேர்ந்த அதிபர் இருக்கிறார்.
4. நற்பிட்டிமுனை சிவசக்தி பாடசாலையில் ஆசிரியர் தரத்தில் உள்ள ஒருவர் அதிபராக கடமை ஆற்றுகின்றார்.
5. மருதமுனை அக்பர் வித்தியாலயத்தில் பிரதி அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபராகவும், அதிபரானவர் ஆசிரியர் தரத்தில் உள்ளவராகவும் காணப்படுகின்றார்.
இவற்றை நோக்கும் போது அதிபர் தரம் பாடசாலை நிர்வகிப்பதற்கு தேவையில்லாத ஒன்றாக இங்கு கருதப்படுகின்றது.
எனவே மக்களின் கருத்தும் திருப்தியும்தான் முக்கியமானது.
இந்த பாடசாலைக்கு அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த எம்.சி.என். றிப்கா அவர்களை நிரந்தர அதிபராக நியமித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் . என்று தனது கருத்தை முன்வைத்தார்.
0 comments :
Post a Comment