காலத்தை வென்று நிற்கும் காவியத் தலைவன் அஷ் ஷஹீத் - எம்.எச்.எம் அஷ்ரஃப் இன் 75வது பிறந்த தினம்.



னிதர்கள் எல்லோரும் கால எல்லைக்கு கட்டுப்பட்டவர்கள் தான்..... மிக உயர்ந்த சேவைகள் செய்து மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர்கள் மாத்திரம் காலத்தை வென்று வாழ்கிறார்கள்......

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி, துரைமுகங்கள் கப்பல் துறை புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் அஷ் ஷஹீத் - எம்.எச்.எம். அஸ்ரஃப் அவர்களின் 75வது பிறந்த தினம் இன்று நினைவு கூறப்படுகிறது.

தென்கிழக்குப் பிராந்தியத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் முகம்மது ஹூஸைன்(விதானை), மதீனா உம்மா ஆகியோருக்கு மகனாக 1948.10.23 ம் திகதி எம்.எச்.எம். அஸ்ரஃப் தோன்றினார்.

பிரித்தானிய காலனித்துவ அரசு காலத்தில் வண்ணிமை, திசாவை, பொலிஸ் விதானை போன்ற பதவிகள் வழக்கத்தில் இருந்து வந்தன . அஸ்ரஃப் அவர்களின் மூதாதையர் பலர் அப்பதவிகளை வகித்து வந்துள்ளனர்.

சம்மாந்துறை வண்ணிமை, மாப்பிட்டிய வண்ணிமை, ஏறாவூர் வண்ணிமை ஆகிய வண்ணிமைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

முகம்மது ஹுசைன் விதானையின் தகப்பனார் சீனி முகம்மது என்பவர் போலீஸ் விதானையாக கல்முனையில் கடமையாற்றினார் என்பது வரலாற்றில் காணக்கிடக்கிறது.

தோன்றினால் புகழோடு தோன்றுக... அஃஹதிலார் தோன்றுதல் தோன்றாமை நன்று!

என்ற வல்லுவர் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப புகழ் பூத்த குடும்பம் ஒன்றில் வாரிசாகவே அஷ்ரஃப் தோன்றினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் எழுதிய "அஸ்ரஃப் " எனும் அரசியல் மாமேதை என்ற நூல், அனிஷ்டஸ் ஜெயராஜ் எழுதிய "கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்" என்ற நூல், மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா(மதனி) எழுதிய "என் மனத்திரையில் எம்.எச்.எம். அஸ்ரஃப்" போன்ற நூல்களை வாசிக்கும் போது தலைவர் அஸ்ரஃப் அவர்களின் புகழ் பூத்த குடும்பப் பின்னணி விரிந்து கிடப்பதைப் பார்க்க முடிகின்றது.

அவரது பாடசாலை காலங்களிலும் சட்டக்கல்லூரி வாழ்க்கையிலும் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னமும் உணர முடிகிறது.

1967 இல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில் "மதிகெட்ட இஸ்ரேலுக்கு சாவு மணி" எனும் தலைப்பில் பலஸ்தீன மக்களின் சட்ட ரீதியான தாயகப்போராட்டத்தை ஆதரித்து எழுதியிருந்தார் என்பது வரலாறு.

1968ம் ஆண்டு கல்முனையில் இஸ்லாமிய சோசலிச முன்னணி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டை முன்னிட்டு இடம்பெற்ற உயர்தரமாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு இஸ்லாத்தில் சோசலிசம் இல்லை, இஸ்லாம் வேறு சோசலிசம் வேறு என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக்காட்டி, சபையில் பரபரப்பை ஏற்படுத்தினார்,

பாகிஸ்தானின் சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இரவு விருந்துபசார வைபவம் ஒன்று இடம்பெற்றது அவ்வைபவத்தில் கலந்து கொள்ளுமாரு சட்டக்கல்லூரி மாணவர் சிலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட அஷ்ரஃப் அவர்களும் நண்பர்களும் அங்கு மதுபானம் பரிமாறப்பட்டதை எதிர்த்து வெளியேரினர். அது சம்பந்தமாக அறிக்கையும் விடப்பட்டிருந்தது,

கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் பாடசாலைகளில் அவர் அறிமுகப்படுத்திய கலாச்சார திட்டத்தை எதிர்த்து "அமைச்சரின் நடனமும் ஆலிம்களின் தாளமும்" எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட கை நூல்,

இப்படி தொடர்ந்து கொண்டு செல்ல என்னால் முடியும்.

வராலாற்றுக்காலம் முதல் இலங்கையில் தோன்றிய பல முஸ்லிம் தலைவர்கள் சமூகத்தின் தனித்துவ உரிமைகளுக்காக உழைத்து வந்துள்ளனர் என்பதை வரலாற்று நெடுகிழும் பார்க்க முடிகிறது.

1855இல் அன்றைய பிரித்தானிய காலனித்துவ அரசு சட்டவாக்க சபையில் இண பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்த முற்பட்ட போது முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு சமூகமல்ல அவர்கள் தமிழை தாய் மொழியாய் பேசுவதால் அவர்களை பொது இனக்குழுமமாய் கருதப்பட வேண்டும், அவர்களுக்கென்று தனித்துவமான பிரதிநிதித்துவம் தேவையில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அவ் வாதத்தை உடைத்தெரிந்து முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான சமூகம் என்பதை நிருவியதுடன், பிரதிநிதித்துவமும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

புரொக்டர் அப்துல் காதரின் துருக்கித் தொப்பிப் போராட்டமும் முஸ்லிம் சமூகத்தின் சமைய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை வழக்காரர்களையும் சிதைந்து விடாமல் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட்டது. இப்படியாக காலத்திற்கு காலம் முஸ்லிம்களின் தனித்துவமான உரிமைகளை நிலை நாட்டுவதில் முஸ்லிம் தலைவர்கள் செய்த பங்களிப்புக்களை நாம் இலகுவில் மறந்து விட முடியாது. அந்த வரலாற்று தடையங்களில் இருந்து தான் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றுவாய் பற்றி நோக்குதல் வேண்டும்.

முஸ்லீம்களுக்கென்று எல்லாமே தனித்துவமாய் இருக்கின்ற போது அரசியலில் மாத்திரம் நாம் என்ன சலைத்தவர்களா?? என்ற கேள்வியை எழுப்பி அக் கேள்விக்கு விடை கண்டவர் அஷ் ஷஹீத் - எம்.எச்.எம். அஸ்ரஃப்.

சுதந்திர இலங்கையில் சரியாக 4 தசாப்தங்கள் கழிந்ததன் பின் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மலர்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

1989 பெப்ரவரி மாதம் 15ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் வரலாரு படைத்ததுடன், பாராளுமன்றத்திலும் இடம்பிடித்துக்கொண்டது.

1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஒரு அரசாங்கத்தை நிருவும் வல்லமை தலைவர் அஸ்ரஃப் அவர்களுக்கு கிடைத்தது. அமைச்சரவையில் தனியொரு மனிதராக இருந்து கொண்டு அலப்பரிய சேவைகளைச் செய்து வரலாறு படைத்துக்காட்டினார் மறைந்த தலைவர்.


களம், காலம் அறிந்து சேவை செய்த அரசியல் தீர்க்கதரிசி அவர்.

முஸ்லிம்களின் அரசியலில் அவர் ஏற்படுத்திச்சென்ற அதிர்வுகள் எத்தனை தசாப்தங்கள் கடந்து சென்றாலும் அதன் எதிரொலி உணரப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சுவிஸ் நாட்டு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் என்னை வீடு வந்து சந்தித்தார், அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் அவருக்கு வழிகாட்டியாக வந்திருந்தார். தன்னை அறிமுகப்படுத்திய அவர் முஸ்லிம் காங்கிரஸை ஆய்வுக் கட்டுரைக்காக தேர்ந்தெடுத்துள்ளேன் அதன் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக உங்களைக் காண வந்தேன் என்று அம் மாணவர் கூறிய போது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன், தலைவர் அஸ்ரஃப் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதை விடவும் சிறந்த தருணம் அவரது வாழ்வில் இருக்க முடியமா?? என்ற கேள்வி எனக்குள் எழுந்த போது நெஞ்ஞம் கணத்து நீர் திவளைகளை வெளிப்படுத்தின.

காலத்தைப் படைப்பவர்கள் காலத்தால் அழிவதில்லை அவர்கள் காலத்தை வென்று வாழ்கிறார்.


ஏ.எல்.அப்துல் மஜீத்,
தவிசாளர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :