கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் புதன்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற நடப்பாண்டு நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான தேர்தலில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எம்.நிசார் மற்றும் ஐ.எல்.எம்.றமீஸ் ஆகியோருடன் போட்டியிட்ட இவர் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
60 வருட கால வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பெண் சட்டத்தரணி ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். அத்துடன் கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவி என்பதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பரின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment