திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ்வினால் நேற்று முன்தினம் (2) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டவர் கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் ஜவ்பர் ரிஸ்வான் (38 வயது) எனவும் தெரியவந்துள்ளது.
கிண்ணியா கட்டையாறு பகுதியில் மத்ரசாவிற்கு செல்லும்போது சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றில் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு (02) திறந்த நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.
மத்ரசாவிற்குச் சென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் கூறியே அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும், 1500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கட்டளையிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்குமாறும் அதனை கட்டத் தவறினால் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனைப் பணத்திலிருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் அத்தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment